ஐபோன் 13 மினி மூலம் தமிழ்நாட்டு மாணவர்களால் எடுக்கப்பட்ட புகைப்படம் அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளது. இந்நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் டிம் குக் அவர்களை வெகுவாக பாராட்டியுள்ளார். எழும்பூர் அருங்காட்சியகத்தில் இந்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
சமூகத்தின் வாழ்வியலை புகைப்படத்தில் அப்படியே பிரதிபலித்துள்ளதாக புகைப்படம் எடுத்த தமிழ்நாட்டு மாணவர்களை டிம் குக் பாராட்டியுள்ளார். 'எ லேண்ட் ஆப் ஸ்டோரிஸ்' என்ற பெயரில் வைக்கப்படவுள்ள புகைப்பட கண்காட்சிக்கு தமிழ்நாட்டு மாணவர்கள் எடுத்த புகைப்படம் தேர்வாகியுள்ளது.
இதுகுறித்து டிம் குக் ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டை சேர்ந்த 40 மாணவர்கள் சமூகத்தின் வாழ்வியலை அப்படியே பிரதிபலிக்கும் புகைப்படத்தை ஐபோன் 13 மினி மூலம் எடுத்துள்ளனர். வரலாற்றுச் சிறப்புமிக்க எழும்பூர் அருங்காட்சியகத்தில் மாணவர் கண்காட்சியில் அவர்களின் படைப்புகள் இடம்பெற்றுள்ளன" என பதிவிட்டுள்ளார். இந்த பதிவோடு மாணவர்கள் எடுத்த இரண்டு புகைப்படங்களை அவர் இணைத்துள்ளார்.
தமிழ்நாட்டையும் அதன் கதைகளையும் இளம் கலைஞர்கள் மூலம் கண்காட்சி காட்சிப்படுத்தியுள்ளதாக கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்களின் இணையதளத்தில், "முடிவில்லா கதைகளை கொண்ட வாழ்விடமாக தமிழ்நாடு திகழ்கிறது. பலதரப்பட்ட மக்கள், உணவு, கட்டிடக்கலை, கலாசாரம், இயற்கை வளத்தை உடைய தமிழ்நாட்டின் அற்புதத்தை இந்த புகைப்படங்கள் மூலம் பிரதிபலிப்பதே சிறந்த வழி.
இதையும் படிக்க | 10 கி.மீக்கு மகளின் சடலத்தை தூக்கி சென்ற தந்தை...மனிதத்தை கேள்விக்குள்ளாக்கிய விடியோ
இயற்கையை அப்படியே பிரதிபலிக்கும் மாணவர்களின் பார்வை, முடிவே இல்லாத தமிழ்நாட்டு கதைகள் ஆகியவை ஒருங்கிணைந்து பார்வையாளர்களை கட்டிபோட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் இயற்கை மற்றும் செயற்கை மிக்க பாரம்பரியத்தை ஆவணப்படுத்த கடந்த சில மாதங்களாகவே மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுவந்தது. கண்காட்சிக்கு வருமாறு மக்களுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். ஏப்ரல் 17ஆம் தேதியோடு, கண்காட்சி நிறைவுபெறுகிறது.