சத்தீஸ்கர் சுர்குஜா மாவடத்தில் இறந்த ஏழு வயது மகளின் சடலத்தை அவரது தந்தை தனது தோளில் தூக்கி சென்ற சம்பவம் மனதை உலுக்கியுள்ளது. இதுகுறித்து விடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. இதுகுறித்து விசாரணை செய்ய சத்தீஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சர் டி.எஸ். சிங் தியோ உத்தரவு பிறப்பித்துள்ளார்.
லகான்பூர் கிராமத்தில் உள்ள சுகாதார மையத்தில் வெள்ளிக்கிழமை காலை அந்த சிறுமி உயிரிழந்ததாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். சடலத்தை எடுத்து செல்லும் வாகனம் வருவதற்கு முன்பு சிறுமியின் உடலை அவரது தந்தை எடுத்து சென்றதாகவும் அலுவலர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
இதுகுறித்து விரிவாக பேசிய சுகாதார மையத்தின் மருத்துவர் வினோத் பார்கவ், "அம்தாலா கிராமத்தில் வசித்துவரும் இஸ்வர் தாஸ், உடல் நலக்குறைவாக இருந்த தனது மகள் சுரேகாவை லகான்பூர் சுகாதார மையத்திற்கு காலை அழைத்து வந்தார். சிறுமியின் ஆக்ஸிஜன் அளவு (60) மிகவும் குறைவாக இருந்தது.
கடந்த சில நாள்களாகவே சிறுமி காய்ச்சலால் அவதிப்பட்டுவந்துள்ளதாக அவரது பெற்றோர் கூறினர். முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவரது உடல் நிலை மோசமடைந்தது. காலை 7:30 மணி அளவில் சிறுமி உயிரிழந்தார். உடலை எடுத்து செல்தவற்கு வாகனம் விரைவில் வரும் என குடும்பத்தினரிடம் கூறினோம். அது காலை 9:20 மணியளவில் வந்தது, ஆனால் அதற்குள் அவர்கள் உடலுடன் வெளியேறினர்" என்றார்.
வீடு வரை கிட்டத்தட்ட 10 கி.மீ தூரத்திற்கு தனது தோளில் மகளின் சடலத்தை அவரது சந்தை தூக்கிச் சுமந்தபடி சென்றுள்ளார். இதுகுறித்த விடியோ வெளியானதையடுத்து, இந்த சம்பவம் குறித்து மாவட்ட முதன்மை மருத்துவ மற்றும் சுகாதார அலுவலர் விசாரிக்க சுகாதாரத்துறை அமைச்சர் டி.எஸ். சிங் தியோ உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | கட்டுப்பாடு விதித்த செபி...ரிலையன்ஸ் குழுமத்தின் துணை நிறுவனங்களிலிருந்து விலகிய அனில் அம்பானி
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தியோ, "காணொளியை பார்த்தேன். கவலையாக இருந்தது. இந்த விவகாரம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு முதன்மை மருத்துவ அலுவலரிடம் கூறியுள்ளேன். கடமையை செய்யாதவர்களை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளேன்.
பணியில் இருந்த சுகாதார பணியாளர்கள் குடும்பத்தினரை வாகனத்திற்காக காத்திருக்கும்படி வற்புறுத்தியிருக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்திருக்க வேண்டும்" என்றார்.