திருப்பதி அருகே பேருந்து விபத்து: இறந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் - பிரதமர் அறிவிப்பு
சித்தூர் பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு குடியரசுத்தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சித்தூர் பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு குடியரசுத்தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
திருப்பதி அருகே பாகராப்பேட்டையில் 50 அடி பள்ளத்தில் நேற்று இரவு தனியார் பேருந்து திடீரென கவிழ்ந்தது. இந்த விபத்தில் 7 பேர் பலியானார்கள். 45 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
திருப்பதியில் திருமணம் ஒன்றில் பங்கேற்க சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஓட்டுநரின் அலட்சியமே விபத்துக்குக் காரணம் என நம்பப்படுவதாக திருப்பதி காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சித்தூர் பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு குடியரசுத்தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் அலுவலகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், சித்தூர் பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபம், காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘’ ஆந்திரத்தின் சித்தூரில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பால் வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைவார்கள் என நம்புகிறேன்.
உயிரழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000-மும் வழங்கப்படும்.’’ இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.