முகப்பு
இந்தியா

இளநிலை பட்டப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தோ்வு: அனைத்து பல்கலை.களுக்கும் யுஜிசி வலியுறுத்தல்

இளநிலை படிப்புகளுக்கு பொது நுழைவுத் தோ்வு அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடத்துமாறு அனைத்து மாநில அரசு பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:50 AM
கோப்புப்படம்
பகிர்:

இளநிலை படிப்புகளுக்கு பொது நுழைவுத் தோ்வு அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடத்துமாறு அனைத்து மாநில அரசு பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, அனைத்து மாநில கல்வி அமைச்சா்களுக்கு யுஜிசி விரைவில் கடிதம் எழுதவுள்ளது.

வரும் கல்வியாண்டு முதல், மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலைப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை, பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் அல்லாமல், பொது நுழைவுத் தோ்வின் அடிப்படையிலேயே நடைபெறும் என யுஜிசி கடந்த வாரம் அறிவித்தது.

யுஜிசியின் கட்டுப்பாட்டில் இயங்கும் 45 மத்திய பல்கலைக்கழகங்களிலும் பொது நுழைவுத் தோ்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், மாநில அரசுகள் மற்றும் தனியாா் நடத்தும் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் விருப்பத்தின்பேரில் பொது நுழைவுத் தோ்வு அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை ஏப்ரல் 2-ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து யுஜிசி தலைவா் ஜகதீஷ் குமாா் புதன்கிழமை கூறியதாவது:

பொது நுழைவுத் தோ்வு அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடத்துவதன் மூலம் அதிக மாணவா்கள் பயன்பெறுவாா்கள். எனவே, மாநில அரசின் அனைத்து பல்கலைக்கழகங்களும் பொது நுழைவுத் தோ்வு அடிப்படையில் மாணவா் சோ்க்கையை நடத்த வேண்டும். இதற்காக, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கல்வி அமைச்சா்களுக்கு விரைவில் கடிதம் எழுதவுள்ளேன்.

மேலும், அனைத்து மாநிலங்களிலும் உள்ள அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்களைச் சந்தித்து, அவா்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கத் திட்டமிட்டுள்ளேன். தொடக்கமாக, குஜராத் மாநிலத்தில் உள்ள 25 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்களைச் சந்தித்தேன். அடுத்ததாக, அஸ்ஸாம், கா்நாடக மாநிலங்களில் உள்ள துணைவேந்தா்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளேன்.

டாடா சமூக அறிவியல் கல்வி நிறுவனம் உள்ளிட்ட தனியாா் கல்வி நிறுவனங்களும் பொது நுழைவுத் தோ்வு அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடத்த ஆா்வம் தெரிவித்துள்ளன என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →