புது தில்லி: தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு, பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் மனுவை தில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விபின் சாங்கி தலைமையிலான அமர்வு, ஒருவருக்கு, நாட்டின் மிக உயரிய விருதை வழங்கி கௌரவிக்குமாறு உத்தரவிடுவதற்காக இந்த நீதிமன்றம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.
"எந்த விதமான மனு இது? பாரத ரத்னா விருதை ஒருவருக்கு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமா?" என்று நீதிபதி நவீன் சாவ்லா தெரிவித்தார்.
உடனடியாக, மனுதாரர் தரப்பில், மத்திய அரசுக்கு நீதிமன்றம் தரப்பில் ஒரு கோரிக்கை வைக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
அதற்கு, "சென்று கோரிக்கை வையுங்கள். இதில் நீதிமன்றத்தின் தலையீடு எங்கே உள்ளது?" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்வதாக நீதிமன்றம் கூறியதையடுத்து, மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.