என்ன செய்யனும்னு எங்களுக்கு தெரியும்: உக்ரைன் விவகாரத்தில் இந்தியா காட்டம்
"தயவு செய்து, உயர்வு மனப்பான்மையுடன் நடந்து கொள்ள வேண்டாம். என்ன செய்ய வேண்டும் என்பது எங்களக்கு தெரியும்" என நெதர்லாந்து நாட்டின் தூதருக்கு ஐநாவுக்கான இந்திய தூதர் திருமூர்த்தி பதிலடி அளித்துள்ளார்.
ஐநா பொதுச்சபையில் உக்ரைன் விவகாரம் தொடர்பான தீர்மானத்தின்போது இந்தியா வாக்களிக்காமல் தவிர்த்திருக்கக் கூடாது என நெதர்லாந்து நாட்டின் தூதர் கரேல் வான் ஓஸ்டரோம் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக ட்வீட் செய்துள்ள ஐநாவுக்கான இந்திய தூதர் திருமூர்த்தி, "தயவு செய்து, உயர்வு மனப்பான்மையுடன் நடந்து கொள்ள வேண்டாம். என்ன செய்ய வேண்டும் என்பது எங்களக்கு தெரியும்" என பதிவிட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி, உக்ரைனுக்கு எதிராக ரஷியா ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. முன்னதாக, உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய பகுதிகளை சுதந்திரமான பகுதிகளாக ரஷியா அறிவித்தது.
Advertisement
இதற்கு மேற்கத்திய நாடுகள் சார்பாக கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் ரஷியாவை கடுமையாக கண்டித்தன. ஆனால், ரஷியாவின் செயலை கண்டிக்கும் விதமாக ஐநா பாதுகாப்பு கவுன்சில், பொதுச்சபை, மனித உரிமை கவுன்சில் ஆகியவற்றிவல் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் வாக்களிக்காமல் இந்தியா தவிர்த்துவருகிறது.
எனவே, ரஷியாவுக்கு எதிரான அணியில் இந்தியாவை கொண்டு வர அமெரிக்க உள்ளிட்ட பல்வேறு நாடுகள் முயற்சி செய்துவருகின்றன. இந்த நிலையில்தான், நெதர்லாந்து நாட்டின் தூதர் தெரிவித்த கருத்துக்கு இந்திய தூதர் எதிர்வினையாற்றியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
உக்ரைன் தலைநகர் கிவ் அருகே உள்ள நகரங்களிலிருந்து படைகளை பின்வாங்கும்போது அப்பாவி மக்களை ரஷிய ராணுவ வீரர்கள் கொன்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதை முன்வைத்து, கடந்த ஏப்ரல் மாதம், ஐநா மனித உரிமைகள் கவுன்சிலிலிருந்து ரஷியாவை நீக்கும் நோக்கில் ஐநா பொதுச்சபையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில்கூட, இந்தியா நடுநிலையே வகித்தது.