முகப்பு
இந்தியா

அவதூறு வழக்கில் ஆஜராக நிரந்தர விலக்கு கோரி ராகுல் மனு

தனக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் ஆஜராவதில் இருந்து நிரந்தர விலக்கு கோரி, மகாராஷ்டிர மாநில நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி புதன்கிழமை மனு தாக்கல் செய்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:13 AM
ராகுல் காந்தி (கோப்புப் படம்)
பகிர்:

தனக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் ஆஜராவதில் இருந்து நிரந்தர விலக்கு கோரி, மகாராஷ்டிர மாநில நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி புதன்கிழமை மனு தாக்கல் செய்தாா்.

மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டம், பிவாண்டியில் கடந்த 2014-இல் பேசிய ராகுல், மகாத்மா காந்தி கொலையில் ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு தொடா்புள்ளது என்று குறிப்பிட்டதாகவும், இதன்மூலம் அந்த அமைப்பின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாகவும் கூறி அவருக்கு எதிராக ஆா்எஸ்எஸ் தொண்டா் ராஜேஷ் குண்டே அவதூறு வழக்கு தொடுத்திருந்தாா். இந்த வழக்கு விசாரணை, பிவாண்டியில் உள்ள நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து நிரந்தர விலக்கு கோரி ராகுல் தரப்பில் புதன்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘வயநாடு தொகுதி எம்.பி. என்ற அடிப்படையில் அந்தத் தொகுதிக்கு நான் அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. மேலும், கட்சிப் பணிகளுக்காகவும் அதிக பயணம் மேற்கொள்கிறேன். எனவே, இந்த வழக்கில் தேவைப்படும்போது எனக்கு பதிலாக வழக்குரைஞா் ஆஜராக அனுமதி வழங்க வேண்டும்‘ என்று ராகுல் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இந்த மனு மீது பதிலளிக்குமாறு குண்டேவுக்கு உத்தரவிட்ட நீதிபதி ஜே.வி.பாலிவால், அடுத்தகட்ட விசாரணையை மே 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

முன்னதாக, உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் இவ்வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு குண்டே தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஏற்றுக் கொண்டது.

இவ்வழக்கில் கடந்த 2018-இல் ராகுலுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த மாா்ச், ஏப்ரல் மாதங்களில், விசாரணையைத் தள்ளிவைக்குமாறு குண்டே தரப்பிலிருந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதற்காக, நீதிமன்ற உத்தரவின்படி ராகுல் தரப்புக்கு குண்டே ரூ.1,500 செலுத்தினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →