மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய 4 பேரை தீவிரவாத ஒழிப்புப் படையினர் இன்று கைது செய்துள்ளனர்.
மும்பையில் 1993-ஆம் ஆண்டு நடைபெற்ற 12 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 257 பேர் பலியானதுடன் 1,400-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்பை திட்டமிட்டு செய்ததாக நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரின் கூட்டாளிகளான அபுபக்கர், யாகூப் மேனன், டைகர் மேனன் உள்ளிட்டோரின் மீது வழக்குப்பதிவு செய்ப்பட்டது. இருப்பினும், அப்போது யாரும் இந்தியாவில் இல்லாததால் அபுபக்கர் 29 ஆண்டுகள் தேடுதலுக்குப் பிறகு கடந்த பிப்ரவரி மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கைது செய்யப்பட்டார்.
தற்போது, இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிற வேளையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 4 பேரை குஜராத் தீவிரவாத ஒழிப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
முன்னதாக, இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான யாகூப் மேனன் கடந்த 2013 ஆண்டு கைது செய்யப்பட்டார்.
விசாரணை முடிவில் உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டதால் மகாராஷ்டிர அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு நாக்பூரில் யாகூப் மேனனை தூக்கிலிட்டது குறிப்பிடத்தக்கது.