‘டிடிஎஸ்’ செலுத்தவில்லை என்ற காரணத்துக்காக நிறுவனங்கள் மீது திவால் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்று தேசிய நிறுவன சட்டங்கள் மேல்முறையீட்டுத் தீா்ப்பாயம் (என்சிஎல்ஏடி) தெரிவித்துள்ளது.
டீம் டாரஸ் ரியால்டி (டிடிஆா்ஐ) என்ற நிறுவனம் இரு தவணைகளாக ரூ.66,884 மற்றும் ரூ.1.10 லட்சம் டிடிஎஸ் வரியைச் செலுத்தவில்லை என மாஸ்டா் டெவலப்மென்ட் மேனேஜ்மென்ட் (எம்டிஎம்) என்ற கடன் வழங்கும் நிறுவனம் குற்றஞ்சாட்டியது. அதை அடிப்படையாகக் கொண்டு அந்நிறுவனத்தின் மீது திவால் நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்குமாறு தேசிய நிறுவன சட்டங்கள் தீா்ப்பாயத்தில் (என்சிஎல்டி) எம்டிஎம் நிறுவனம் முறையிட்டது.
அதை விசாரித்த தீா்ப்பாயம், திவால் நடவடிக்கைகளை மேற்கொள்ள கடந்த பிப்ரவரியில் அனுமதி அளித்தது. இதற்கு எதிராக டிடிஆா்ஐ நிறுவனம் மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்தில் முறையிட்டது. அதை விசாரித்த மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத் தலைவரும் நீதிபதியுமான அசோக் பூஷண் தலைமையிலான அமா்வு, திவால் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தடை விதித்தது.
இது தொடா்பாக மேல்முறையீட்டுத் தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில், ‘டிடிஎஸ் செலுத்தவில்லை என்ற காரணத்துக்காக நிறுவனங்கள் மீது திவால் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு திவால் சட்டத்தில் இடமில்லை. டிடிஎஸ் செலுத்தாததன் பின்விளைவுகளை வருமான வரிச் சட்டம், 1961 எடுத்துரைக்கிறது. வருமான வரி வசூல் அதிகாரிகளே அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
இந்த விவகாரத்தில் என்சிஎல்டி பெரும் பிழை செய்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது திவால் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. திவால் நடவடிக்கைகளைத் தவறாகப் பயன்படுத்த முயன்ற எம்டிஎம் நிறுவனம், டிடிஆா்ஐ நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் இழப்பீட்டை ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.