காங்கிரஸை பற்றி கருத்து சொல்வது ஏற்புடையதாக இருக்காது என்று கட்சியிலிருந்து விலகிய மூத்த தலைவர் கபில் சிபல் புதன்கிழமை தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், இந்தியாவின் மிகச்சிறந்த வழக்கறிஞர்களில் ஒருவருமான கபில் சிபல் சமீபமாகவே காங்கிரஸ் கட்சியின் மீது அதிருப்தியில் இருந்து வந்தார்.
அண்மையில் நடைபெற்ற 5 மாநில சட்டப் பேரவைத் தோ்தல்களில் கட்சியின் படுதோல்விக்கு பிறகு கட்சியின் தலைமை குறித்து கேள்வி எழுப்பிய கபில் சிபல், கட்சித் தலைமைப் பொறுப்பில் இருந்து காந்தி குடும்பத்தினா் விலகி கட்சியை வழிநடத்த மற்ற தலைவா்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இது காங்கிரஸார் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிக்க | காங்கிரஸில் இருந்து விலகினார் கபில் சிபல்
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து மாநிலங்களவை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவுடன் சென்று இன்று காலை வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
சுயேட்சையாக போட்டியிடும் கபில் சிபலுக்கு சமாஜ்வாதி முழு ஆதரவை அளிக்கும் என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
வேட்புமனுத் தாக்கல் செய்த பின் செய்தியாளரிடம் பேசிய கபில் சிபல் கூறியதாவது:
காங்கிரஸில் இருந்து ராஜிநாமா செய்துவிட்டேன். இதன்பிறகு காங்கிரஸை பற்றி கூறுவது ஏற்புடையதாக இருக்காது. காங்கிரஸை பற்றி எதுவும் சொல்ல மாட்டேன். 30 -31 ஆண்டுகள் உறவிலிருந்து வெளியே வருவது எளிதானதல்ல.
கடந்த சில ஆண்டுகளாக, சுயேட்சையாக போட்டியிட்டு சிலர் மட்டுமே நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளனர், குறிப்பாக மாநிலங்களவைக்கு. எனக்கு மிகப் பெரிய வாய்ப்பை அகிலேஷ் யாதவ், சிவபால் யாதவ், அஸாம் கான் ஆகியோர் அளித்துள்ளனர். நாட்டின் பிரச்னைகளை நான் அவையில் எழுப்புவேன் என்றார்.