இலக்கியத்திற்காக வழங்கப்படும் புகழ்பெற்ற ‘புக்கர்’ பரிசு இந்தாண்டு இந்தியாவைச் சேர்ந்த ஹிந்தி நாவலாசிரியை கீதாஞ்சலி ஸ்ரீக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இலக்கியத் துறையில் சிறந்த ஆக்கங்கள் எனக் கருதப்படும் புத்தகங்கள் ஆண்டுதோறும் புக்கர் பரிசுப் போட்டிக்கு அனுப்பப்படுகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர் டாமன் கல்கட் எழுதிய ‘தி பிராமிஸ்’ என்னும் நாவலுக்கு புக்கர் பரிசு வழங்கப்பட்டது.
தற்போது, நடப்பு ஆண்டிற்கான புக்கர் பரிசுப் போட்டியில் உலகம் முழுவதிலிருந்தும் 135 புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன. இதில் இந்தியாவைச் சேர்ந்த தில்லியில் வசிக்கும் எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ (64) ஹிந்தியில் எழுதிய ‘ரெட் சமாதி’(Ret Samadhi) நாவல் ‘டோம்ப் ஆஃப் சாண்ட்’ (Tomb of Sand) என்னும் பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுக் கவனத்தை ஈர்த்ததால் இந்த முறை புக்கர் போட்டிக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில், இறுதிச் சுற்றில் பங்குபெற்ற 6 புத்தகங்களில் ஒன்றான ‘டோம்ப் ஆஃப் சாண்ட்’(tomb of sand) நடுவர்களால் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ‘புக்கர்’ பரிசை வென்றுள்ளது.
‘புக்கர்’ பரிசுத் தொகையான ரூ. 50 லட்சத்தை கீதாஞ்சலி ஸ்ரீயும் புத்தகத்தை ஹிந்தியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்த டெய்சி ராக்வெல்லும் பகிர்ந்துகொள்வார்கள்.
மேலும், இந்திய மொழியொன்றில் எழுதப்பட்ட புத்தகம் 'புக்கர்' பரிசு பெறுவது இதுவே முதல்முறையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.