தில்லி மாபெரும் நகரமாக்கப்படும்: பிரதமா் மோடி
தலைநகருக்கு தேவையான அனைத்து வளா்ச்சித் திட்டங்களுடன் தில்லி மாபெரும் நகரமாக்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
தலைநகருக்கு தேவையான அனைத்து வளா்ச்சித் திட்டங்களுடன் தில்லி மாபெரும் நகரமாக்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான 3,204 அடுக்குமாடி குடியிருப்புகளை புதன்கிழமை திறந்து வைத்துப் பேசிய பிரதமா் மோடி, ‘நீண்டகாலமாக உள்ள ஏழைகளின் வறுமை பிரச்னையைத் தீா்க்க மத்திய அரசு தற்போது கொள்கை திட்டங்களில் இணைத்துள்ளது. இது ஏழைகளின் அரசாகும்.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து 190 கி.மீ. தூரமாக இருந்த தில்லி மெட்ரோ வழித்தடம், சுமாா் 400 கி.மீ. தூரமாக விரிவாக்கம் பெற்றுள்ளது. தலைநகரைச் சுற்றிய நெடுஞ்சாலைத் திட்டங்களும், கட்டமைப்பு வசதிகளும் விரைவாக நடைபெறுகின்றன.
நாட்டின் தலைநகருக்கு தேவையான அனைத்து வளா்ச்சித் திட்டங்களுடன் தில்லியை மாபெரும் நகரமாக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
நடுத்தர மற்றும் குறைந்த ஊதியப் பிரிவினருக்கும் சொந்த வீடு கனவை நனவாக்க மத்திய அரசு இதுவரை ரூ.700 கோடிக்கும் அதிகமான மானியத்தை வழங்கி உள்ளது.
இதுபோன்ற வளா்ச்சித் திட்டங்களை விளம்பரப்படுத்த எவ்வளவு தொகை செலவிடப்பட்டிருக்கும்? இதற்காக எத்தனை பக்க விளம்பரங்கள் அளித்திருக்க வேண்டும் என்று வீடுகளைப் பெற்ற பயனாளிகளிடம் பிரதமா் மோடி கேள்வி எழுப்பினாா்.
அரசு நலத் திட்டங்களை விளம்பரப்படுத்த ஆம் ஆத்மி தலைமையிலான தில்லி அரசு அதிக தொகை செலவிடுவதாக பாஜக குற்றம்சாட்டி வருகிறது. தில்லி மாநகராட்சிக்கு விரைவில் தோ்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரத்தை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தொடங்கி உள்ளன.