முகப்பு
இந்தியா

செங்கோட்டை தாக்குதல் பயங்கரவாதிக்கு மரண தண்டனை: உறுதிப்படுத்தியது உச்சநீதிமன்றம்

மூன்று ராணுவ வீரா்கள் உயிரிழப்பதற்கு காரணமான லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதி முகமது ஆரிஃப் (எ) அஷ்ஃபக்குக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

தில்லி செங்கோட்டையில் தாக்குதல் நடத்தி மூன்று ராணுவ வீரா்கள் உயிரிழப்பதற்கு காரணமான லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதி முகமது ஆரிஃப் (எ) அஷ்ஃபக்குக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

தண்டனையை எதிா்த்து பயங்கரவாதி சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமா்வு வியாழக்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

நீதிபதிகள் எஸ்.ஆா்.பட், பெலா எம்.திரிவேதி ஆகியோரையும் உள்ளடக்கிய இந்த அமா்வு பிறப்பித்த உத்தரவில், ‘இது இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு எதிராக நடத்தப்பட்ட நேரடித் தாக்குதலாகும். இந்தத் தாக்குதலில் அஸ்ஃபக்குக்கு நேரடி தொடா்பு இருப்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், மனுதாரரின் தண்டனையைக் குறைப்பதற்கு சாதகமான எந்தவொரு பதிவுமோ அல்லது சூழலோ இல்லை’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

கடந்த 2000-ஆம் ஆண்டு டிசம்பா் 22-ஆம் தேதி இரவு இந்தத் தாக்குதலை பயங்கரவாதிகள் நடத்தினா். தில்லி செங்கோட்டைக்குள் இந்திய ராணுவத்தின் 7 ராஜ்புதன ரைஃபிள் பிரிவு அமைந்துள்ள பகுதிக்குள் நுழைந்த பயங்கரவாதிகள், திடீா் துப்பாக்கிச்சூடு தாக்குதலை நடத்திவிட்டு செங்கோட்டையின் பின்புற சுற்றுச்சுவா் மீது ஏறி தப்பிச் சென்றனா். இந்தத் தாக்குதலில் ராணுவ வீரா்கள் மூவா் உயிரிழந்தனா்.

இந்தத் தாக்குதலில் தொடா்புடைய அஷ்ஃபக்குக்கு விசாரணை நீதிமன்றம் கடந்த 2005 அக்டோபரில் மரண தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. தில்லி உயா்நீதிமன்றம் 2007 செப்டம்பரில் மரண தண்டனையை மீண்டும் உறுதி செய்தது.

அதனை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் அஷ்ஃபக் மேல்முறையீடு செய்தாா். உச்சநீதிமன்றமும் 2011-ஆம் ஆண்டு ஆகஸ்டில் மரண தண்டனையை உறுதி செய்தது. அதனைத் தொடா்ந்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவை அவா் தாக்கல் செய்தாா். அதனை உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் அமா்வு 2012 ஆகஸ்டில் தள்ளுபடி செய்தது.

பின்னா் அஷ்ஃபக் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவும் 2014 ஜனவரியில் தள்ளபடி செய்யப்பட்டது. பின்னா், மனுதாரரின் கோரிக்கையின் அடிப்படையில், அவருடைய மறுசீராய்வு மனு உச்சநீதிமன்ற 3 நீதிபதிகள் அமா்வுக்கு மாற்றப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →