இந்திய ஒற்றுமை நடைப்பயணத்துக்கு பதிலடி: பாஜக நடத்தும் 200 ரதயாத்திரை
ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்துக்கு பதிலடியாக, ராஜஸ்தான் அரசின் தோல்வியை எடுத்துக்காட்டும் வகையில் பாஜக ரத யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளது.
ஜெய்ப்பூர்: காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்துக்கு பதிலடியாக, ராஜஸ்தான் அரசின் தோல்வியை எடுத்துக்காட்டும் வகையில் பாஜக ரத யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் 200 தொகுதிகளிலும் 200 ரதங்கள் அல்லது தேர்களைப் போல மாற்றப்பட்ட குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளை நவம்பர் 17ஆம் தேதி முதல் டிசம்பர் 17ஆம் தேதி வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏழு முதல் 10 நாள்கள் நடைபெறும் இந்த ரத யாத்திரை, ராஜஸ்தான் மாநிலத்தின் அனைத்து மண்டலங்கள் மற்றும் 52 ஆயிரம் வாக்குச்சாவடிகளையும் இணைக்கும் வகையில் நடைபெறும்.
Advertisement
மாநிலத்தின் எம்எல்ஏ, முன்னாள் வேட்பாளர், மாவட்டத் தலைவர் என யார் ஒருவரும் தங்கள் பகுதியில் இந்த ரத யாத்திரையை மேற்கொள்ளலாம் என்றும், அனைத்து ரதங்களிலும் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படமும், மத்திய அரசின் திட்டங்களும், பாஜகவின் கொள்கை விளக்கங்களும் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.