தெலங்கானா முதல்வர் இல்லத்தை முற்றுகையிட்ட ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சித் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சித் தலைவரும் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா, தெலங்கானாவில் ஆட்சியில் உள்ள சந்திர சேகர் ராவின் தெலங்கானா ராஷ்டிர சமிதி அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.
தெலங்கானாவில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து வருகிறார். இதற்காக அவர் மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பேரணியில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவின் வீட்டின் முன்பாக சென்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டார் ஒய்.எஸ்.ஷர்மிளா. அவரது கட்சியினருடன் காரில் சென்ற அவரை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். வெளியில் வரச் சொல்லி அறிவுறுத்தினர்.
ஆனால், அவரோ காரை விட்டு அவர் இறங்கவும் இல்லை, அங்கிருந்து வெளியில் வரவும் இல்லை. அங்கிருந்து செல்ல காவல்துறை வலியுறுத்தியும் அவர் தொடர்ந்து மறுத்த நிலையில், காவல்துறையினர் கிரேன் கொண்டு காரை அகற்றினர். அப்போதும் ஷர்மிளா காரினுள் இருந்துள்ளார். இதில் காரின் கண்ணாடி சேதமடைந்தது.
பின்னர் ஷர்மிளாவை காவல்துறையினர் கைது செய்து ஹைதராபாத்தில் உள்ள எஸ்ஆர் நகர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
முதல்வர் வீட்டை முற்றுகையிட்ட இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.