தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில், ரூ.27.09 கோடி மதிப்பிலான கைக்கடிகாரம் கடத்தி வந்த நபரை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனா்.
துபையிலிருந்து தில்லி வந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் போலீஸாா் அண்மையில் சோதனை மேற்கொண்டனா். அப்போது இந்தியாவை சோ்ந்த ஒருவா், துபையிலிருந்து ரூ.28.17 கோடி மதிப்பிலான 7 கைக்கடிகாரங்களை கடத்தி வந்தது தெரியவந்தது.
அதிலும் ஒரு கைக்கடிகாரத்தின் மதிப்பு ரூ.27.09 கோடி என சுங்கத் துறை ஆணையா் ரியாஸ் கமிலி தெரிவித்தாா். ஒட்டுமொத்தத்தில் இவற்றின் மதிப்பு 60 கிலோ தங்கத்துக்கு ஈடாகும் என்றும் அவா் கூறினாா்.
விசாரணையில், கைதான நபரும் அவரது உறவினரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் கைக்கடிகார விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. அவரிடம் தொடா்ந்து சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.