புது தில்லி: அக்டோபர் 25ஆம் தேதி முதல் மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ்கள் உள்ள வாகனங்களுக்கு மட்டும் எரிபொருள் நிரப்ப வேண்டும் என்று தில்லியில் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களையும் தில்லி அரசு புதன்கிழமை கேட்டுக் கொண்டுள்ளது.
போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒரு வருடத்துக்கும் மேலான வாகனங்களின் உரிமையாளர்கள், மின்சார அல்லது பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களுக்கு மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ் இல்லாத வாகன உரிமையாளர்கள் ஒரு வாரத்திற்குள் அவற்றைப் பெற வேண்டும் அல்லது அவர்களின் வாகன பதிவுச் சான்றிதழ்கள் தற்காலிகமாக நிறுத்திவைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இதே போல் அண்டை மாநிலங்களில் இருந்து வரும் பேருந்துகளின் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ்களை சரிபார்க்க அரசு தனியாக குழுக்களை அமைத்துள்ளது.
வாகன உரிமையாளர்கள் அசௌகரியத்தை தவிர்க்க, அக்டோபர் 25ஆம் தேதிக்கு முன் செல்லுபடியாகும் சான்றிதழை பெறுமாறு போக்குவரத்துத் துறை கேட்டுக் கொண்டுள்ளது. சரியான மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதமும், மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 25க்குப் பிறகு, தில்லியில் மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ் இல்லை என்றால் எரிபொருள் இல்லை. அதே வேளையில் மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ் இல்லாத வாகனங்கள் மீதான நடவடிக்கையை எடுக்க தில்லி அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி பம்புகளின் அனைத்து டீலர்களும் அக்டோபர் 25 முதல் மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ் இல்லாத மோட்டார் வாகனங்களுக்கு எரிபொருளை விற்க வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிடுவது குறித்து சுற்றுச்சூழல் துறை பரிசீலித்து வருகிறது.
இந்த மாத தொடக்கத்தில் தில்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவிக்கையில், தில்லியில் அக்டோபர் 25 முதல் மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ் இல்லாத வாகன உரிமையாளர்களுக்கு பெட்ரோல் பம்புகளில் எரிபொருள் வழங்கப்படாது.
செப்டம்பர் 29ஆம் தேதி நடைபெற்ற சுற்றுச்சூழல், போக்குவரத்து மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகளின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.