பெண் கைதிகள் கர்வா சௌத் கொண்டாட சிறைத் துறை ஏற்பாடு
உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் சிறையில் பெண் கைதிகள் கர்வா சௌத் கொண்டாட சிறை நிர்வாகம் ஏற்பாடுகளை செய்துள்ளது.
ஷாஜஹான்பூர்: வட இந்திய மக்கள் வெகுச் சிறப்பாக கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்று கர்வா சௌத். இந்த பண்டிகையன்று விரதமிருந்து பெண்கள் பூஜை செய்வது வழக்கம். எனவே, உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் சிறையில் பெண் கைதிகள் கர்வா சௌத் கொண்டாட சிறை நிர்வாகம் ஏற்பாடுகளை செய்துள்ளது.
தனது கணவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ விரும்பி, காலை முதல் இரவு வரை பெண்கள் விரதம் இருப்பது வழக்கம். எனவே, பெண் கைதிகள் காலை முதல் விரதம் இருக்க வசதியாக, பழங்கள் மற்றும் சில நீராகாரம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல், மாலையில் விரதத்தை முடிக்கும் முன் கணவரைப் பார்ப்பது வழக்கம் என்பதால், சிறைக் கைதிகளை நாளைய தினம் அவரது கணவர்கள் வந்து சந்திக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Advertisement
இது குறித்து சிறைத் துறை கூறுகையில், திருமணமான 66 பெண் கைதிகள் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது கணவர்களும் இங்கேயே அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விரதம் இருக்க ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.