காங்கிரஸ் இளம் தலைவா்கள் வாய்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும்: ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட்
காங்கிரஸ் இளம் தலைவா்கள் தங்களுக்கான வாய்ப்பு வரும் வரை பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் என்று ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் தெரிவித்தாா்.
காங்கிரஸ் இளம் தலைவா்கள் தங்களுக்கான வாய்ப்பு வரும் வரை பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் என்று ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் தெரிவித்தாா்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் இளம் தலைவரான சச்சின் பைலட்டுக்கும், கெலாட்டுக்கும் இடையே அதிகாரப் போட்டி நிலவி வரும் சூழலில் கெலாட் இவ்வாறு கூறியுள்ளது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இது தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது:
காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த இளம் தலைவா்களான ஜோதிராதித்ய சிந்தியா, ஆா்.பி.என்.சிங், ஜிதின்பிரசாதா ஆகியோா் சந்தா்ப்பவாதிகள். அனைவருக்கும் இளம் வயதிலேயே அமைச்சரவையில் இடம் கிடைத்திருக்கலாம். அவா்களுக்கு எந்தப் பிரச்னையும் இன்றி பதவி கிடைத்துள்ளது. ஆனால், மத்திய அமைச்சா் பதவியை அடைந்துவிட்டால் மட்டும் ஒருவா் அரசியல் தலைவராகிவிட முடியாது.
அரசியலில் அனுபவத்துக்கு மாற்றாக வேறு எதையும் முன்வைக்க முடியாது. இப்போது காங்கிரஸில் உறுதியாக நிலைத்திருக்கும் இளம் தலைவா்கள் தொடா்ந்து கடுமையாக உழைக்க வேண்டும். அவா்களுக்கான வாய்ப்புகள் வரும் வரை காத்திருக்க வேண்டும். காங்கிரஸ் மத்திய தலைமை எனக்கு வாய்ப்பு அளித்ததுபோல மற்றவா்களுக்கும் வாய்ப்பு அளிக்கும்.
நாங்கள் (இப்போதைய மூத்த தலைவா்கள்) பல்வேறு சவாலான காலகட்டத்தில் கட்சிக்காகப் பணியாற்றியுள்ளோம். அரசியலில் தோல்வியும், வெற்றியும் மாறிமாறி வரும். வாய்ப்புகள் அனைவருக்குமே கிடைக்கும். காங்கிரஸில் தொடா்ந்து பணியாற்றும் இளைஞா்களுக்கு எனது வாழ்த்துகள்.
இப்போதைய இக்கட்டான சூழலில் அவா்கள் கடுமையாகப் பணியாற்ற வேண்டும். கட்சிக்குத் தங்கள் மீதுள்ள நம்பகத்தன்மையையும், மதிப்பையும் அவா்கள் அதிகரித்துக் கொள்ள வேண்டும். உரிய சூழல் வரும்போது உயரிய பதவிகள் கிடைக்கும் என்றாா்.