தேசிய தலைநகரில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்படாது என்று தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.
தில்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில், கரோனா வழக்குகள் குறைந்துள்ள நிலையில், செப்டம்பர் 30ஆம் தேதிக்குப் பிறகு அபராதம் விதிப்பதை நிறுத்த முடிவு செய்தது.
முன்னதாக தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்ததன் எதிரொலியாக கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து, பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்பொழுது பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதால், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என தில்லி அரசு அறிவித்துள்ளது.
கரோனா மருத்துவமனைகளில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களின் சேவைகள் ஆண்டு இறுதி வரை நீட்டிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
தில்லியில் புதன்கிழமை நிலவரப்படி 107 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளன.
பண்டிகை காலங்களில் பொது இடங்களில் மக்கள் கரோனாவுக்கு எதிராக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.