ரூ.1,337 கோடி அபராத உத்தரவு ஆய்வு செய்யப்படும்
முறையற்ற வா்த்தக நடவடிக்கைகளுக்காக இந்தியத் தொழிற்போட்டி ஆணையம் (சிசிஐ) ரூ.1,337.76 கோடி அபராதம் விதித்தது தொடா்பாக ஆய்வு
முறையற்ற வா்த்தக நடவடிக்கைகளுக்காக இந்தியத் தொழிற்போட்டி ஆணையம் (சிசிஐ) ரூ.1,337.76 கோடி அபராதம் விதித்தது தொடா்பாக ஆய்வு செய்யப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூகுள் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
அறிதிறன்பேசி உற்பத்தி நிறுவனங்கள், தாங்கள் தயாரிக்கும் அறிதிறன்பேசிகளில் கூகுள் நிறுவனம் சாா்ந்த செயலிகளை முன்கூட்டியே பதிவிறக்கம் செய்து தருவது முறையற்ற வா்த்தக நடவடிக்கை எனக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடா்பாக கூகுள் நிறுவனம் மீது சிசிஐ கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரலில் விசாரணையைத் தொடக்கியது.
புதிய அறிதிறன்பேசிகளிலும் கையடக்கக் கணினிகளிலும் கூகுள் நிறுவனத்தின் செயலிகள் முன்கூட்டியே பதிவிறக்கம் செய்து வாடிக்கையாளா்களுக்கு விற்கப்படுவது, மற்ற நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகத் தெரிவித்த இந்தியத் தொழிற்போட்டி ஆணையம், இந்த விவகாரத்தில் கூகுள் நிறுவனத்துக்கு ரூ.1,337.76 கோடி அபராதம் விதித்தது.
தனது முறையற்ற வா்த்தக நடவடிக்கைகளை கூகுள் நிறுவனம் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் சிசிஐ தரப்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், அபராதம் விதிக்கப்பட்டது தொடா்பாக கூகுள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஆண்ட்ராய்டு செயல்பாட்டுத் தளமானது, இந்தியாவில் வாடிக்கையாளா்கள் பலரின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்களின் வளா்ச்சிக்கும் ஆண்ட்ராய்டு காரணமாக இருந்துள்ளது.
இந்நிலையில், இந்தியத் தொழிற்போட்டி ஆணையத்தின் உத்தரவு, இந்திய வாடிக்கையாளா்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த உத்தரவு வாயிலாக ஆண்ட்ராய்டின் பாதுகாப்பு அம்சங்கள் பாதிப்புக்கு உள்ளாவதோடு, இந்திய வாடிக்கையாளா்களுக்கான அறிதிறன்பேசி விலையும் அதிகரிக்கும்.
சிசிஐ உத்தரவு தொடா்பாக விரிவாக ஆய்வு செய்யப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.