பிரிட்டிஷ் ராணியாகப் பதவியேற்கவுள்ள கமீலா தனிப்பட்ட முறைப் பயணமாக பெங்களூருவில் முகாமிட்டுள்ளார்.
10 நாள்கள் பயணமாக இந்தியா வந்துள்ள அவர், பெங்களூருவில் தங்கி சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.
பிரிட்டிஷ் அரசர் மூன்றாம் சார்லஸ் மனைவியும், பிரிட்டிஷ் ராணியாக பதவியேற்கவுள்ளவருமான கமீலா, கடந்த வியாழக்கிழமை இந்தியா வந்தடைந்தார். அரச குடும்பத்தைச் சேர்ந்த நண்பர்களுடன் பிரிட்டிஷ் விமானம் மூலம் பெங்களூரு வந்த கமீலா, விமான நிலையத்திலிருந்து செளக்யா பகுதிக்கு சாலை மார்க்கமாக 40 கிலோமீட்டர் பயணித்தார்.
பிரிட்டிஷ் ராணியாகப் பதவியேற்கவுள்ளதைத் தொடர்ந்து அவர் மேற்கொள்ளும் முதல் சர்வதேச பயணம் இது என்பதால், ஸ்காட்லாந்து அரச குடும்பத்தினருக்கான சிறப்பு பாதுகாப்புப் படையினரும் உடன் வந்துள்ளனர்.
75 வயதுடைய கமீலா, ஆயுர்வேதம் மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைக்காக செளக்யா பகுதியிலுள்ள மருத்துவ மையத்திற்கு வருகை புரிந்துள்ளார்.
இந்த பயணம் முழுக்க முழுக்க தனிப்பட்ட பயணம் என்பதால், இதனை பொதுமைப்படுத்த வேண்டாம் என காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கமீலா பங்கேற்கும் வகையில் எந்தவிதமான நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்படவில்லை.
கமீலா கடந்த 2010ஆம் ஆண்டு செளக்யா பகுதிக்கு முதல்முறை வருகைப் புரிந்தார். இதுவரை 8 முறை அவர் இங்கு வந்து சிகிச்சை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.