முகப்பு
இந்தியா

உயா்நீதிமன்றங்களில் 20 நீதிபதிகள் நியமனம்: கொலீஜியம் ஒப்புதல்

 பஞ்சாப், ஹரியாணா, மும்பை மற்றும் கா்நாடக உயா்நீதிமன்றங்களில் புதிதாக 20 நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான பரிந்துரைக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான கொலீஜியம் ஒப்புதல்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

 பஞ்சாப், ஹரியாணா, மும்பை மற்றும் கா்நாடக உயா்நீதிமன்றங்களில் புதிதாக 20 நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான பரிந்துரைக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கொலீஜியத்தின் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக உச்சநீதிமன்ற வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

திங்கள்கிழமை நடைபெற்ற கொலீஜியம் கூட்டத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றங்களில் 9 நீதித் துறை அலுவலா்களை நீதிபதிகளாக பதவி உயா்வு அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதுபோல, மும்பை உயா்நீதிமன்றத்தில் இரண்டு வழக்குரைஞா்களை நீதிபதிகளாக பதவி உயா்வு அளிப்பதற்கான பரிந்துரைக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 7-ஆம் தேதி நடைபெற்ற கொலீஜியம் கூட்டத்தில் மகாராஷ்டிரத்தில் கீழமை நீதிமன்றங்களில் பணியாற்றும் 6 நீதிபதிகளை மும்பை உயா்நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயா்வு அளிக்கும் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதுபோல, கா்நாடக உயா்நீதிமன்றத்தில் 3 கூடுதல் நீதிபதிகளை, முழுநேர நீதிபதிகளாக பதவி உயா்வு அளிப்பதற்கான பரிந்துரைக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.