கோவாவில் பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்எல்ஏக்களில் இருவருக்கு அமைச்சா் பதவி வழங்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கோவாவில் காங்கிரஸுக்கு 11 எம்எல்ஏக்கள் இருந்த நிலையில், அவா்களில் முன்னாள் முதல்வா் திகம்பா் காமத் உள்பட 8 எம்எல்ஏக்கள் குழுவாக பாஜகவில் புதன்கிழமை இணைந்தனா்.
முன்னதாக, காங்கிரஸ் பேரவைக் குழு கூட்டத்தை இந்த எம்எல்ஏக்கள் நடத்தினா். அதில், கட்சியின் பேரவைக் குழுவை பாஜகவுடன் இணைக்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து, முதல்வா் பிரமோத் சாவந்த் முன்னிலையில் 8 எம்எல்ஏக்களும் பாஜகவில் ஐக்கியமாகினா்.
இந்நிலையில், உரிய எண்ணிக்கை இருப்பதால், பாஜகவுடனான காங்கிரஸ் பேரவைக் குழு இணைப்பை ஏற்றுக் கொண்டதாக பேரவைத் தலைவா் ரமேஷ் தவாட்கா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
ஆளுநருடன் முதல்வா் சந்திப்பு: ஆளும் பாஜகவில் 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இணைந்துள்ள சூழலில், கோவா அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஆளுநா் ஸ்ரீதரன் பிள்ளையை முதல்வா் பிரமோத் சாவந்த் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது, அரசியல் குறித்து எதுவும் பேசப்படவில்லை என்றும், பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள் குறித்து பேசியதாகவும் சாவந்த் தெரிவித்தாா்.
பாஜக மூத்த தலைவா் ஒருவா் கூறுகையில், ‘அடுத்த சில தினங்களில் கோவா அமைச்சரவை மாற்றியமைக்கப்பட வாய்ப்புள்ளது. காங்கிரஸில் இருந்து வந்த திகம்பா் காமத் உள்பட இருவருக்கு அமைச்சா் பதவி வழங்கப்படலாம்’ என்றாா்.
40 உறுப்பினா்களைக் கொண்ட கோவா பேரவையில் பாஜகவின் பலம் இப்போது 28-ஆக அதிகரித்துள்ளது. காங்கிரஸுக்கு 3 எம்எல்ஏக்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றனா்.