முகப்பு
இந்தியா

இது பாதயாத்திரை அல்ல ஊழல் யாத்திரை: பாஜக

ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் நடத்தி வருவது பாதயாத்திரை அல்ல ஊழல் யாத்திரை என பாஜக விமர்சித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் நடத்தி வருவது பாதயாத்திரை அல்ல ஊழல் யாத்திரை என பாஜக விமர்சித்துள்ளது.

கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் காய்கறிக் கடைக்காரரிடம் பாதயாத்திரைக்காக நன்கொடை கேட்டு மிரட்டும் விடியோ இணையத்தில் வைரலானதையடுத்து பாஜக இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளது.

இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா கூறியதாவது: “ காங்கிரஸ் பொதுமக்களிடம் இருந்து பணத்தினைப் பெற்று தங்களது பைகளில் நிரப்பிக் கொள்கிறது. இது பாதயாத்திரை அல்ல ஊழல் யாத்திரை. காங்கிரஸ் குடும்பம் எப்போதும் மக்கள் பணத்தினை எப்படி தங்களுடையதாக்கிக் கொள்வது என்றே செயல்படுகிறது. அது நேஷனல் ஹெரால்டு விஷயமாக இருந்தாலும் சரி கொல்லத்தில் நடந்த நிகழ்வாக இருந்தாலும் சரி காங்கிரஸ் பொதுமக்களின் பணத்தை தனதாக்கிக் கொள்ளவே நினைக்கிறது.

ஏழை மக்களுக்காகவும் மற்றும் நாட்டின் பொருளாதார பிரச்னைகளுக்காகவும் இந்த யாத்திரை நடத்தப்படுவதாகக் கூறிக் கொள்ளும் காங்கிரஸ் கடந்த 70 ஆண்டுகளாக மிகப் பெரிய பொருளாதார மற்றும் அரசியல் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அதனால் தான் இன்று அவர்கள் பொது மக்களிடம் இப்படி நடந்து கொள்கிறார்கள். நடந்த நிகழ்வுக்கு வருத்தம் கூட தெரிவிக்காமல் அதை கேரள மாநில காங்கிரஸ் கட்சியினர் நியாயப்படுத்தி வருகின்றனர். சிலர் அந்த காய்கறிக் கடைக்காரரை மிரட்டியும் வருகின்றனர்.” என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.