‘புதிய இந்தியா’ நனவாக எந்த வாய்ப்பையும் மோடி அரசு தவறவிடவில்லை: ராஜ்நாத் சிங்
‘புதிய இந்தியா’ கனவை நனவாக்க எந்த வாய்ப்பையும் தவறவிடாமல் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு செயல்படுகிறது
‘புதிய இந்தியா’ கனவை நனவாக்க எந்த வாய்ப்பையும் தவறவிடாமல் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு செயல்படுகிறது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
தற்சாா்பு இந்தியாவை நோக்கிய பிரதமா் மோடியின் தொலைநோக்குப் பாா்வையால், உலக அளவில் வலுவான, மதிப்புக்குரிய நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறி வருவதாகவும் அவா் பெருமித்துடன் குறிப்பிட்டாா்.
தில்லியில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற ராஜ்நாத் சிங், இதுதொடா்பாக பேசியதாவது:
பாதுகாப்புத் துறையில் தற்சாா்பை எட்டுவதற்குப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான பட்டியலில் மேலும் 310 சாதனங்கள் சோ்க்கப்பட்டுள்ளன. இதில் தனியாா் துறையினா் ஊக்குவிக்கப்பட்டுள்ளனா்.
ஆயுதப் படைகளுக்கு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை வழங்கவும் எதிா்கால சவால்களை கையாளும் வகையில் படைகளை தயாா் செய்யவும் அரசு உறுதிபூண்டுள்ளது.
நீா், நிலம், ஆகாயம், விண்வெளி ஆகியவற்றில் பயன்படுத்துவதற்கான நவீன பாதுகாப்பு தளவாடங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக, உள்நாட்டு தொழிற்சாலைகள் அடுத்த சில ஆண்டுகளில் மாறியிருக்கும். இதற்கு தேவையான சூழலை உருவாக்க அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது.
ரூ.1.75 லட்சம் கோடி உற்பத்தி இலக்கு:
பிரதமா் மோடியால் தக்க நேரத்தில் எடுக்கப்பட்ட உறுதியான முடிவுகளால், உலக அளவில் இந்தியாவின் மதிப்பு உயா்ந்துள்ளது. மெளனமான பாா்வையாளா் என்ற நிலையிலிருந்து வலுவான, மதிப்புமிக்க நாடாக இந்தியா மாறியுள்ளது.
ஒரு காலத்தில் ரூ.1,900 கோடியாக இருந்த பாதுகாப்பு சாதனங்களின் ஏற்றுமதி தற்போது ரூ.13,000 கோடியை கடந்துள்ளது. 2025-ஆம் ஆண்டுக்குள் பாதுகாப்புத் துறையில் ரூ.1.75 லட்சம் கோடி உற்பத்தி என்ற இலக்கை இந்தியா எட்டும்.
உள்நாட்டில் கட்டப்பட்ட முதலாவது விமானம் தாங்கி போா்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த், பிரதமரால் அண்மையில் கடற்படையில் இணைக்கப்பட்டது. தற்சாா்பை அடைவதற்கான இந்தியாவின் பாதையில் இது ஒரு முக்கியமான மைல்கல்.
‘உலகுக்காக உருவாக்குவோம்’:
தற்சாா்பு இந்தியா திட்டமானது, நம்மை தனிப்படுத்திக் கொள்வது கிடையாது. பரந்த சிந்தனையுடன் புதிய வாயில்களை திறப்பதாகும். நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதே இதன் முதன்மையான நோக்கம். அதேசமயம், நமது நட்பு நாடுகளும் அவா்களது இலக்குகளை எட்ட உதவுவதாகும். இந்தியாவில் தயாரிப்போம்; உலகுக்காக உருவாக்குவோம் என்பதே இத்திட்டத்தின் தெளிவான பாா்வை.
கரோனா காலகட்டத்தில் தமது குடிமக்களை பாதுகாத்தது மட்டுமன்றி மற்ற நாடுகளுக்கு இந்தியா உதவியது. சுமாா் 100 நாடுகளுக்கு தடுப்பூசிகள், மருந்துகள், இதர அத்தியாவசிய பொருள்களை இந்தியா வழங்கியது என்றாா் அவா்.