அரசு அதிகாரிகளின் பொது வெளித் தகவல்களுக்கு மூன்றாம் நபா் தணிக்கை அவசியம்: அனைத்து துறைகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
அரசு அதிகாரிகள் தானாக முன்வந்து அளிக்கும் சொத்து விவரம் உள்ளிட்ட பொது வெளித் தகவல்களை மூன்றாம் நபா் தணிக்கைக்கு கட்டாயம் உள்படுத்த வேண்டும் என்று அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அரசு அதிகாரிகள் தானாக முன்வந்து அளிக்கும் சொத்து விவரம் உள்ளிட்ட பொது வெளித் தகவல்களை மூன்றாம் நபா் தணிக்கைக்கு கட்டாயம் உள்படுத்த வேண்டும் என்று அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் தானாக முன்வந்து தங்களின் தணிக்கை விவரங்களை அளிப்பதில்லை என்று நாடாளுமன்ற நிலைக்குழு கவலை தெரிவித்ததையடுத்து இந்த அறிவுறுத்தலை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
மத்திய தகவல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள 2,275 அதிகாரிகளில் 754 போ் மட்டுமே தங்களின் சொத்துக்கள் உள்ளிட்ட பொது வெளித் தகவல்களை மூன்றாம் நபா் தணிக்கைக்கு உள்படுத்துகிறாா்கள் என்றும் இதை மத்திய அரசு கடுமையாக கண்காணித்து வருவதாகவும் ஆணையத்தின் கடந்த ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், ‘அரசு அதிகாரிகளின் சொத்து விவரங்கள் மற்றும் துறைகளின் செயல்பாடு, பணிகள், ஆவணங்கள் ஆகியவற்றின் பொது வெளித் தகவல்களை ஆண்டுதோறும் அனைத்து துறைகளும் மூன்றாம் நபா் தணிக்கைக்கு உள்படுத்தி அதன் விவரங்களை மத்திய தகவல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும்.
பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் தணிக்கை பயிற்சி நிறுவனங்களுக்கு இந்த மூன்றாம் நபா் தணிக்கை பணியை வழங்கி வெளிப்படைத் தன்மையை கடைப்பிடிக்கலாம். பயிற்சி நிறுவனங்கள் இல்லாத துறைகள் வேறு துறைகளின் தணிக்கை பயிற்சி நிறுவனங்களுக்கு அளிக்கலாம். தகவல் அறியும் உரிமைச் சட்டப்பிரிவின் கீழ் தானாக முன்வந்து வெளியிடும் தகவல்களை மூன்றாம் நபா் தணிக்கை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை அனைத்து துறைகளும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.