சண்டீகர்: சண்டீகர் பல்கலைக்கழக மாணவியின் ஆட்சேபகரமான விடியோ பதிவு செய்யப்பட்டு பகிரப்பட்ட விவகாரத்தில் காவல்துறை பெண் அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது, இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒரு மாணவி மற்றொரு மாணவருடன் உள்ள தனது ஆட்சேபகரமான பதிவை அவரே பகிர்ந்துள்ளார் என்று தெரிவித்தனர். அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் தொடர்புடைய மாணவர் தலைமறைவாக உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதே வேளையில் பல்கலைக்கழக மாணவிகள் மேலும் சிலரின் விடியோ காட்சிகள் சமக ஊடங்களில் பகிரப்பட்டதாக வெளியான தகவல்களை பல்கலைக்கழக நிர்வாகம் மறுத்துள்ளது.
அதோடு, இந்த விவகாரத்தில் சில மாணவிகள் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல்கள் முற்றிலும் வதந்தி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் கவனத்தில் கொண்டுள்ளது. இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய கவுன்சிலிங் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | இப்படி செய்தால் எப்படி? அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் நடந்த அவலம்
இந்த விவகாரம் தொடர்பாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் முழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அவர் இது குறித்து டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், சண்டீகர் பல்கலைக்கழக விடுதிதயில் நடைபெற்ற துரதிருஷ்டவசமான சம்பவம் வேதனை அளிக்கிறது. நமது மகள்கள் நமது கௌரவம். இந்த விவகாரம் தொடர்பாக உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க, காவல்துறையைச் சேர்ந்த மூன்று பெண் சிறப்பு விசாரணை அதிகாரிகளைக் கொண்ட குழுவை நியமித்து உத்தரவிட்டுள்ளார். இதுவரை இந்தச் சம்பவத்தில் ஒரு மாணவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளது.