தேர்தல் பணியில் ஈடுபடுவோர் தபால் வாக்குச் சீட்டுகளை நீண்ட நாள்கள் கையில் வைத்திருப்பதால் ஏற்படும் முறைகேடுகளைத் தடுப்பதற்காக, அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட தனி மையத்தில் மட்டுமே அவர்கள் வாக்களிக்கும் வகையில் உரிய சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
இது அமல்படுத்தப்படும்பட்சத்தில் தேர்தல் பணியில் ஈடுபடுவோர் தபால் வாக்குச் சீட்டுகளை நீண்ட நாள்கள் தம்வசம் வைத்திருப்பதால் ஏற்படும் முறைகேடுகள் தடுக்கப்படும். இதன்மூலம் வேட்பாளர்களோ அல்லது அரசியல் கட்சியினரோ அவர்களுக்குத் தரும் அச்சுறுத்தல், தொல்லை நீங்கும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுதொடர்பாக கடந்த செப். 16-ஆம் தேதி தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அப்போது மத்திய சட்டத் துறை அமைச்சருக்கு இதுகுறித்து பரிந்துரைக்கவும் முடிவு எட்டப்
பட்டது.
தேர்தல் பணியில் ஈடுபடுவோர் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தனி வாக்குச் சாவடி மையத்தில் மட்டுமே இனிமேல் வாக்களிக்க வேண்டும். இதற்கென தேர்தல் நடத்தை விதி, 1961, 18-இல் திருத்தம் செய்யவும் அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.