ஜெய்போர்: ஒடிசாவில், சாலையிலேயே குழந்தையைப் பெற்றெடுத்த பெண், சாலை இல்லாததால் ஆம்புலன்ஸில் ஏற 2 கி.மீ. தொலைவுக்கு குழந்தையுடன் நடந்து சென்ற அவல நிலை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கோராபூட் பகுதியின் தஸ்மந்த்பூர் என்ற இடத்தில், புதன்கிழமை இரவு இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
துங்கால் கிராமத்தைச் சேர்ந்த சுவாதி முதுலி (28) என்ற பெண்ணுக்கு புதன்கிழமை இரவு பிரசவ வலி வந்ததும், ஆம்புலனஸ் அழைக்கப்பட்டது. ஆனால், வரும் வழியில் ஆம்புலன்ஸ் சாலையில் சிக்கிக் கொண்டதால், ஆம்புலன்ஸை மண்ணிலிருந்து எடுப்பதற்குள், கர்ப்பிணியை ஆம்புலன்ஸ் நிற்கும் இடத்துக்கு அழைத்து வருவமாறு அறிவுறுத்தப்பட்டது. மேலும், ஆம்புலன்ஸ் கர்ப்பிணியின் இடத்துக்கு வர சாலை வசதி இல்லாததையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உடனடியாக கர்ப்பிணி நடந்துவந்து கொண்டிருந்த நிலையில், வழியிலேயே அவருக்கு குழந்தை பிறந்தது. பிறகு தனக்குப் பிறந்த பெண் குழந்தையுடன் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு டார்ச் லைட் உதவியுடன் நடந்துச் சென்று ஆம்புலன்ஸில் ஏறியுள்ளார்.
பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
தாஸ்மந்த்பூர் பகுதியில் சுமார் 121 கிராமங்கள் உள்ளன. இவற்றுக்கு சாலை வசதிகள் இல்லை. சாலைகள் இல்லாததால், வாகனப் போக்குவரத்துக்கு வாய்ப்பே இல்லாமல், மலை மற்றும் கடினமான பாதைகளைக் கடந்தே மக்கள் கிராமத்திலிருந்து வெளியே வரும் நிலை உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.