மதுபானக் கொள்கை வழக்கு: சிபிஐ முன்பு கேஜரிவால் ஆஜர்!
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தில்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தில்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.
தில்லியில் தொண்டர்களும் அதிக அளவில் குவிந்துள்ளதால், சிபிஐ அலுவலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு நவம்பரில் புதிய மதுபான கொள்கையை ஆம்ஆத்மி அரசு அமல்படுத்தியது. இந்த கொள்கை மாற்றத்தை பயன்படுத்தி கோடிக்கணக்கில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து புதிய மதுபானக் கொள்கையை தில்லி அரசு திரும்பப் பெற்றது.
இந்நிலையில், முறைகேடுகள் நடைபெற்றதா இல்லையா என்பது குறித்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், முறைகேடாக சேர்த்த 100 கோடி ரூபாயை கோவா தேர்தலில் ஆம் ஆத்மி பயன்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக தில்லி சிபிஐ அலுவலகத்தில் அரவிந்த் கேஜரிவால் இன்று காலை ஆஜரானார்.
ஆஜராவதற்கு முன்பு தில்லியிலுள்ள தனது இல்லத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.