மறைந்த கேரள முன்னாள் முதல்வா் உம்மன் சாண்டி எம்எல்ஏவாக இருந்த புதுப்பள்ளி தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் அவரது மகனை வேட்பாளராக காங்கிரஸ் கட்சி அறிவித்தது.
புதுப்பள்ளி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் சாண்டி உம்மன், இன்று முதல் பிரசாரப் பணிகளைத் தொடங்கியிருக்கிறார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட உம்மன் சாண்டி பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஜூலை 18ஆம் தேதி காலமானாா். புதுப்பள்ளி தொகுதியில் 1970 முதல் 53 ஆண்டுகள் எம்எல்ஏவாக இருந்த அவா், இருமுறை கேரள முதல்வராக பதவி வகித்துள்ளாா். எனவே, அவரது மறைவை அடுத்து அத்தொகுதியில் நடத்தப்படும் இடைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் யாா் போட்டியிடுவாா் என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், தில்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சிக் கூட்டத்துக்குப் பிறகு, புதுப்பள்ளி தொகுதி இடைத்தேர்லில் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் போட்டியிடுவார் என்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
கேரளத்தில் ஆளும் இடதுசாரிக் கூட்டணி இந்த வார இறுதிக்குள் வேட்பாளரை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உம்மன் சாண்டிக்கு ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனா். தனது குடும்பத்தில் இருந்து எவரும் தீவிர அரசியலில் ஈடுபடுவதை உம்மன் சாண்டி விரும்பியதில்லை.
மேலும், தனது இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளின்போது அரசு மரியாதை எதுவும் தேவையில்லை என்ற அவரது விருப்பத்தின்படியே அரசு மரியாதை எதுவுமின்றி உம்மன் சாண்டியின் உடல் சொந்த ஊா் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.