சாதி வெறி: பட்டியலின இளைஞருக்கு நடந்த கொடூரம்! (விடியோ)
மகாராஷ்டிரத்தில் ஆடுகள் திருடியதாகக் கூறி பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை பிற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மரத்தில் தலைகீழாக கட்டிவைத்து அடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
மகாராஷ்டிரத்தில் ஆடுகள் திருடியதாகக் கூறி பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை பிற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மரத்தில் தலைகீழாக கட்டிவைத்து அடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
இது தொடர்பான விடியோ இணையத்தில் பரவிய நிலையில், இச்சம்பவத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் ஆடுகள் மற்றும் புறாக்கள் திருடியதாகக் கூறி பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை சிலர் மரத்தில் தலைகீழாக கட்டி வைத்துள்ளனர். அந்த கும்பலில் சிலர் கட்டையால் இளைஞரைக் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனை அந்த கும்பலில் இருந்த ஒருவர் விடியோ எடுத்துள்ளார். அந்த விடியோ தற்போது இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
இந்த விடியோ அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிந்து ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டியலின இளைஞரை கட்டிவைத்து அடித்த ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த 6 பேர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களைத் தேடும் பணியில் காவல் துறை ஈடுபட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய பாதிக்கப்பட்ட இளைஞர், தன் மீதும் வாயிலும் அங்கிருந்தவர்கள் சிறுநீர் கழித்தும் எச்சில் துப்பியும் சித்ரவதை செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட இளைஞர் மஹதே, அதே மாவட்டத்தின் ஸ்ரீராம்பூர் பகுதியைச் சேர்ந்தவர். சிறு வயதிலேயே தாய்-தந்தையை இழந்ததால், பாட்டியுடன் தங்கியுள்ளார்.
21 வயதாகும் மஹதே, நர்சிங் கல்லூரியில் பயின்று வருகிறார். காவல் துறை முதல் தகவல் அறிக்கையின்படி, ஆகஸ்ட் 25ஆம் தேதி 6 பேர் தனது வீட்டுக்கு வந்து அவர்களின் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு என் கை-கால்களை கட்டி வைத்து தலைகீழாக தொங்கவிட்டு அடித்தனர். மேலும், அங்கிருந்தவர்கள் சிறுநீர் கழித்தும் எச்சில் துப்பியும் அவமானப்படுத்தினர். ஆடுகளையும் புறாக்களையும் திருடியதாக என்னை என் வீட்டிலிருந்து அழைத்து வந்தனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.