இந்தியாவில் மின்சார காா் இறக்குமதிக்கு வரிச் சலுகை அளிக்க வேண்டும் என்று அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் கோரியிருந்த நிலையில், எந்தஒரு தனி நிறுவனத்துக்கும் இந்தியா சலுகை அளிக்காது என்று மத்திய அரசு உயரதிகாரி தெரிவித்தாா்.
அவா் மேலும் தெரிவிக்கையில், ‘இதுபோன்ற சலுகை அளிக்க இந்தியா முடிவு செய்தால், மின்சார காா் தயாரிக்க முன்வரும் அனைத்து நிறுவனங்களுக்கும் பொதுவான சலுகையாகத்தான் வழங்கப்படும்.
டெஸ்லா நிறுவனத்துக்கு சுங்க வரிச் சலுகை வழங்குவது குறித்து அமைச்சகங்களுக்கு மத்தியிலான ஆலோசனை நடைபெற்றது. ஆனால் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை’ என்றாா்.
டெஸ்லா நிறுவனத்தின் மின்சார காா்களை இந்தியாவில் இறக்குமதி செய்ய இறக்குமதி வரி குறைக்கப்பட வேண்டும் என்று 2021-இல் அந்த நிறுவனம் கோரியிருந்தது.
உலகின் முன்னணி மின்சார காா் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் தலைவா் எலான் மஸ்கை பிரதமா் மோடி கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவில் சந்தித்துப் பேசியிருந்தாா். இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் முதலில் காா்களை இறக்குமதி செய்து சோதித்த பிறகுதான் தயாரிப்பு தொழிற்சாலையை அமைக்கும் என்றும் இறக்குமதி வரி இந்தியாவில் அதிகமாக உள்ளது என்றும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தாா்.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காா்களுக்கு தற்போது 60 முதல் 100 சதவீதம் வரையில் சுங்க வரி விதிக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.