கணவரைப் பழிவாங்க காவல் துறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மனைவி!
கர்நாடகத்தில் கணவரைப் பழிவாங்க காவல்துறைக்கு புரளி வெடிகுண்டு மிரட்டல் செய்தியை அனுப்பிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகத்தில் கணவரைப் பழிவாங்க காவல்துறைக்கு புரளி வெடிகுண்டு மிரட்டல் செய்தியை அனுப்பிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக போலீஸார் கூறியது,
32 வயது பெண் ஒருவர் ஆன்லைனில் நண்பர்களுடன் உரையாடியதைக் கணவர் தட்டிக் கேட்டுள்ளார். ஆனால், மனைவி அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஆண் நண்பர்களுடன் உரையாடி வந்துள்ளார். இதனால் கோபமடைந்த கணவர் மனைவியின் மொபைல் போனை எடுத்து கீழேப் போட்டு உடைத்துள்ளார்.
இது அந்த பெண்ணுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இதை பிகாரைச் சேர்ந்த தனது ஆண் நண்பரிடம் கூறியுள்ளார். பெண்ணின் கணவரைச் சிக்கவைக்க நண்பர்கள் சேர்ந்து திட்டமிட்டனர்.
நண்பர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் குறித்த புரளி செய்தியை அனுப்பியுள்ளார். இதை தனது கணவரின் தொலைபேசியிலிருந்து மூத்த காவல்துறை அதிகாரிக்கு அனுப்பப் பரிந்துரைத்துள்ளார்.
நண்பரின் ஆலோசனையின்படி அந்தப்பெண், தனது கணவரின் தொலைபேசியில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் செய்தியை டிசம்பர் 3ஆம் தேதி காவல்துறைக்கு அனுப்பியுள்ளார். அதன்பின்னர், கணவரின் மொபைலில் இருந்து அதை நீக்கியுள்ளார்.
இதையடுத்து, அந்த பெண்ணின் கணவரைக் காவலில் வைத்து விசாரித்தபோது சந்தேகமடைந்த போலீஸார் அவரது மனைவியிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர், தனது தொலைபேசியை உடைத்ததற்காக அவரைப் பழிவாங்கும் நோக்கத்தில், தனது கணவரின் தொலைபேசியிலிருந்து இந்த புரளி செய்தியை அனுப்பியதாக அவர் ஒப்புக்கொண்டார்.
மிரட்டல் செய்தியை அனுப்பிய பெண் மற்றும் அவரது நண்பர்களின் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.