இந்தியாவில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனினும் ஒரு நாளுக்கு 5 - 7 பேருக்கு வீதம் கரோனா தொற்று கண்டறியப்பட்டு வருவதாக தில்லி சுகதாரத் துறை தெரிவித்துள்ளது.
நாட்டில் கரோனா தொற்று பரவல் மீண்டும் ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 128 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதில் அதிகபட்சமாக கர்நாடகத்தில் 73 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரத்தில் 50 பேருக்கும், ராஜஸ்தானில் 11 பேருக்கும், தமிழ்நாட்டில் 9 பேருக்கும், தெலங்கானாவில் 8 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் இதுவரை 4,054 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையிலுள்ளனர்.
தலைநகரான தில்லியில் இன்று மட்டும் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுதொடர்பாக பேசிய தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் செளரப் பரத்வாஜ், ''சராசரியாக ஒரு நாளுக்கு 400 - 500 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்படுகிறது. ஒரு நாளுக்கு சராசரியாக பதிவாகும் விகிதம் இன்னும் அதிகரிக்கவில்லை என்பதே ஒரே நேர்மறையான விஷயம். இன்று 4 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.