முகப்பு
இந்தியா

புல்வாமா தாக்குதலைப் போல ராமர் கோயிலை தேர்தலுக்காக பாஜக பயன்படுத்துகிறது: காங். அமைச்சர் குற்றச்சாட்டு

புல்வாமா தாக்குதலைப் போலவே, ராமர் கோயிலையும் தேர்தலுக்காக பாஜக பயன்படுத்தி வருகிறது என்று கர்நாடக அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:34 PM
சுதாகர் (கோப்புப்படம்)
பகிர்:

புல்வாமா தாக்குதலைப் போலவே, ராமர் கோயிலையும் தேர்தலுக்காக பாஜக பயன்படுத்தி வருகிறது என்று கர்நாடக அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

பாஜக முந்தைய மக்களவைத் தேர்தலில் புல்வாமா தாக்குதலைப் பயன்படுத்திக் கொண்டதைப் போல, இப்போதைய மக்களவைத் தேர்தலுக்கு ராமர் கோயிலைப் பயன்படுத்தி வருகிறது என்று கர்நாடக திட்ட மற்றும் புள்ளியியல் துறை அமைச்சர் தசரதையா சுதாகர் கூறியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா என்பது ஒரு தேர்தல் உத்தி. மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. மூன்றாவது முறையாக மக்கள் ஏமாற மாட்டார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக ராமர் கோயில் திறப்பு விழா திட்டமிடப்பட்டுள்ளது. ராமர் கோயில் கட்டுவதற்கு நானும், எம்.எல்.ஏ. ரகுமூர்த்தி உள்ளிட்ட பலரும் பங்களித்துள்ளோம். ஆனால் அதனை தேர்தலுக்காக பயன்படுத்தி கொள்ள பாஜக முயற்சிக்கிறது.

பாஜக 2019 மக்களவைத் தேர்தலில் வாக்குகள் பெறுவதற்காக புல்வாமா பயங்கரவாத தாக்குதலைப் பயன்படுத்திக் கொண்டது. அதைப் போலவே தற்போது 2024 மக்களவைத் தேர்தலுக்கு ராமரின் படத்தைக் எடுத்து வந்துள்ளது. ராமர் அனைத்து மக்களுக்குமான கடவுள் ஆவார்.” என்று தெரிவித்தார்.

2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, 2019 பிப்ரவரி 14-ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் தற்கொலைப் படைத் தாக்குதலில் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.