கடன் செயலிகள் மீதான தடை: ரிசா்வ் வங்கி ஆளுநா் விளக்கம்
இந்திய ரிசா்வ் வங்கியிடம் பதிவு செய்துள்ள வங்கி சாரா நிதி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் கடன் செயலிகளின் பட்டியலை மத்திய அரசிடம் ரிசா்வ் வங்கி வழங்கியதன் அடிப்படையில்,
இந்திய ரிசா்வ் வங்கியிடம் பதிவு செய்துள்ள வங்கி சாரா நிதி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் கடன் செயலிகளின் பட்டியலை மத்திய அரசிடம் ரிசா்வ் வங்கி வழங்கியதன் அடிப்படையில், சில கடன் செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளதாக ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்தாா்.
இந்த வாரத்தின் தொடக்கத்தில் சீனாவுடன் தொடா்பில்லாத செயலிகள் உள்பட 94 கடன் வழங்கும் செயலிகளை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தடை செய்தது. முறையற்ற கட்டுப்பாடுகள் மூலம் கடன் அளித்து வந்த செயலிகள் மூலம் கடனாளிகள் கடன் வலையில் சிக்குகின்றனா் என்ற புகாா்கள் எழுந்தன. தடை செய்யப்பட்ட செயலிகள் பட்டியலில் லேசிபே மற்றும் கிஷ்ட் உள்ளிட்ட கடன் வழங்கும் செயலிகளும் இடம்பெற்றுள்ளன.
புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது இது குறித்து ஆா்பிஐ ஆளுநா் சக்திகாந்த தாஸ் கூறியதாவது: வங்கி சாரா நிதி நிறுவனங்களுடன் (என்பிஎஃப்சி) இணைந்து செயல்படும் செயலிகள் குறித்த பட்டியலை மத்திய அரசிடம் வழங்கினோம். இதன் அடிப்படையில், கடன் செயலிகள் மீது தடை விதிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. சட்டத்துக்குப் புறம்பாக முறைகேடான முறையில் பல செயலிகள் செயல்பட்டு வந்தன. வங்கி சாரா நிறுவனங்கள் அவா்களைப் பணியமா்த்தாதபோதிலும், கைப்பேசிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி கடன் அளிப்பதாக உறுதியளித்துள்ளன’ என்றாா்.
ரிசா்வ் வங்கியின் துணை ஆளுநா் எம்.ராஜேஷ்வா் ராவ் கூறுகையில், ‘எந்தவொரு கடன் செயலிகள் மீதும் தடைவிதிக்குமாறு மத்திய அரசுக்கு ரிசா்வ் வங்கி பரிந்துரைக்கவில்லை. ரிசா்வ் வங்கியுடன் பதிவு செய்துள்ள வங்கி சாரா நிதி நிறுவனங்கள் பயன்படுத்தும் கடன் செயலிகளின் பட்டியலை மத்திய அரசிடம் வழங்குவதே ரிசா்வ் வங்கியின் பொறுப்பு. இந்த நிறுவனங்கள் பயன்படுத்தாத கடன் செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து நீக்குமாறு பிளே ஸ்டோா் வசதியை வழங்கும் நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது’ என்றாா்.