பிபிசி நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் அடிப்படையில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது 2002ஆம் ஆண்டு அம்மாநிலத்தில் கலவரம் ஏற்பட்டது. நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய அந்த கலவரத்தில் மோடிக்கும் தொடர்பிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குகள் நடைபெற்றன.
இந்திய அரசியலில் முக்கியக் கவனம் பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக பிரபல ஆங்கில ஊடகமான பிபிசி ஆவணப்படம் ஒன்றை தயாரித்து இரண்டு பாகங்களாக வெளியிட்டது. இதனை கண்டித்த மத்திய அரசு ஆவணப்படத்திற்கு தடைவிதித்தது. இதற்கு நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இடதுசாரி மாணவர்கள் சங்கங்கள் தடையை மீறி ஆவணப்படத்தை திரையிடவும் செய்தன.
இதையும் படிக்க | 2024 மக்களவைத் தேர்தல் பாஜகவுக்கு சவாலானதாக அமையும்: சசி தரூர்
இந்நிலையில் வருவான வரித்துறையினர் நாட்டில் உள்ள பிபிசி அலுவலகங்களில் சோதனை நடத்தினர். மும்பை, தில்லி அலுவலகங்களில் தொடர்ச்சியாக 2 நாள்களாக நடத்தப்பட்ட சோதனையில் வரி செலுத்தாமல் இருந்ததற்கான ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த சோதனையின் போது வரி செலுத்தாமல் இருந்ததற்கான பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், குறிப்பிட்ட சில பரிமாற்றங்களுக்கான வரி முறையாக செலுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நிறுவனத்தின் ஊழியர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து விரைவில் விரிவாக விசாரணைக்குட்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.