குடும்ப வன்முறை சட்ட அமலாக்கம்:மாநில செயலா்களின் கூட்டத்தை கூட்ட மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை
குடும்ப வன்முறை சட்ட அமலாக்கம் குறித்து மாநில முதன்மைச் செயலா்களைக் கூட்டி மத்திய அரசு ஆலோசனை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
குடும்ப வன்முறையில் பாதிக்கப்படும் பெண்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கும் வகையில், குடும்ப வன்முறை சட்ட அமலாக்கம் குறித்து மாநில முதன்மைச் செயலா்களைக் கூட்டி மத்திய அரசு ஆலோசனை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
2022, ஜூலை வரையில் நாட்டில் 4.72 லட்சம் குடும்ப வன்முறை வழக்குகள் நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்தது.
‘குடும்ப வன்முறை சட்டம் அமல்படுத்தி 15 ஆண்டுகள் ஆகிய பின்பும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை சம்பவங்கள் குறையவில்லை. 2019-இல் பதிவான பெண்களுக்கு எதிரான 4.05 லட்சம் குற்ற வழக்குகளில் 30 சதவீதத்துக்கும் மேல் குடும்ப வன்முறை சம்பவங்களாக உள்ளன. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சட்ட உதவியும் தங்குமிடங்களையும் உருவாக்க வேண்டும்’ என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் பெண்கள் அமைப்புகள் வழக்குத் தொடுத்தன.
Advertisement
இந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதிகள் எஸ்.ஆப்.பட், தீபாங்கா் தத்தா ஆகியோா் அமா்வு, ‘குடும்ப வன்முறை சட்டத்தின்படி, மாவட்ட அளவில் பெண்கள் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட வேண்டும். ஒரே அதிகாரி சுமாா் 600 வழக்குகளை கையாள முடியாது. இதை மத்திய அரசு கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலா் அனைத்து மாநில முதன்மைச் செயலா்களின் கூட்டத்தை கூட்டி இந்தப் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும்.
மத்திய நிதி, உள்துறை, சமூக நீதி அமைச்சகத்தின் செயலா்களும், தேசிய பெண்கள் ஆணையம், தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் நிா்வாகிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கு பெற வேண்டும். அடுத்த மூன்று வாரங்களில் இந்தக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.