காங்கிரஸின் ஒற்றுமை நடைப்பயணத்தின் வெற்றி பெற்றதற்கான முக்கிய காரணம் சகோதரத்துவம், ஒற்றுமை தான் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பஞ்சாபில் தனது பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு காந்தி குருத்வாரா ஃபதேகர் சாஹப்பில் வழிபாடு செலுத்தினார். அவர் தலைப்பாகையுடன், அரைக் கை சட்டையை அணிந்து வழிபடும் இடத்திற்குச் சென்றார். பின்னர் ரௌசா ஷெரீப் தர்காவையும் அவர் பார்வையிட்டார்.
பின்னர் சிர்ஹிந்தில் நடந்த கூட்டத்தில் ராகுல் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில்,
நாட்டில் வெறுப்பு மற்றும் வன்முறை சூழல் பரவியுள்ளது. பாஜகவும், ஆர்எஸ்எஸ்ஸும் நாட்டைப் பிரித்து ஒரு மதத்தோடு இன்னொரு மதத்திற்கு எதிராக செயல்பட்டு நாட்டின் சூழலைக் கெடுத்துள்ளது.
நாட்டில் அன்பு, ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் கொண்ட மற்றொரு பாதையைக் காட்ட வேண்டும் என்பதற்காக இந்திய நடைப்பயணத்தைத் தொடங்கினோம் என்றார்.
மேலும், தனது பயணம் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்குச் செல்லும் போது பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு பாஜக பரப்பும் வெறுப்பும், பயம் மற்றும் வன்முறை தான் காரணம்.
சகோதரத்துவம், ஒற்றுமை, மரியாதை நிறைந்த நாடு இந்தியா என்பதால் தான் இந்த நடைப்பயணம் வெற்றி பெற்றுள்ளது. பயணத்தின்போது, விவசாயிகள், சிறு கடைக்காரர்கள், தொழிலாளர்கள், வேலையில்லாத இளைஞர்கள், பெண்கள் மற்றும் பொது மக்களிடம் பேசியதில் நிறைய கற்றுக்கொண்டதாகவும் அவர் கூறினார்.
பஞ்சாபின் சிர்ஹிந்தில் இருந்து தொடங்கிய பயணம் மண்டி கோபிந்த்கர், கன்னா, சஹ்னேவால், லூதியானா, கோரயா, பக்வாரா, ஜலந்தர், தஸ்யுவா மற்றும் முகேரியன் வழியாகச் செல்கிறது. இந்த பயணம் ஜம்மு காஷ்மீருக்குள் நுழைவதற்கு முன்னதாக ஜனவரி 19ஆம் தேதி பதன்கோட்டில் பேரணி நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.