தில்லியில் இரண்டு நாள்களாக நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நிறைவடைந்தது.
மக்களவைத் தேர்தல், மாநிலத் தேர்தல்கள், பாஜக தலைவர் தேர்வு உள்ளிட்டவை ஆலோசிக்க பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் நேற்றும் இன்றும் தில்லியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க ஊர்வலமாக நேற்று வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு மலர்கல் தூவி வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், இன்றும் செயற்குழு கூட்டத்தில் மோடி பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், கட்சியின் துணைத் தலைவர்கள், அனைத்து மாநில பொதுச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.
நிகழாண்டு நடைபெறும் மாநிலத் தோ்தல்கள், 2024 மக்களவைத் தோ்தல், ஜி20 தலைமை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
தொடர்ந்து, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் பதவிக் காலத்தை அடுத்தாண்டு ஜூன் மாதம் வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார்.
நட்டா தலைமையில் பல்வேறு மாநிலத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து, மக்களவை தேர்தலிலும் நட்டா தலைமையில் பாஜக களமிறங்குகிறது.
பல்வேறு முடிவுகள் எடுத்துள்ள பாஜக செயற்குழு இன்று மாலை நிறைவடைந்தது.