நாடாளுமன்ற மாநிலங்களவையைத் தொடர்ந்து மக்களவையும் இன்று நாள் முவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் கடந்த 20-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்றம் 7-வது நாளாக இன்று முடங்கியது.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டு வருகின்றன.
இதையும் படிக்க | சிரிப்பால் வைரலான வேலம்மாள் பாட்டி காலமானார்: முதல்வர் இரங்கல்
இந்நிலையில் இன்று காலை மாநிலங்களவையில் நிகழ்வுகள் தொடங்கிய உடனே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட மக்களவையும் பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இரு அவைகளும் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு மீண்டும் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.