ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா; ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்பு
திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்று பொங்கலிட்டனர்.
திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்று பொங்கலிட்டனர்.
இக்கோயிலில் நிகழாண்டு பொங்கல் விழா அம்மனுக்கு காப்பு கட்டி குடியிருத்தலுடன் தொடங்கி தொடர்ந்து விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் 9ஆம் நாளான செவ்வாய்க்கிழமை பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி அப்பகுதியில் சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றளவில் பெண்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.
இதையும் படிக்க.. சுஷ்மிதாவை தாக்கிய மாரடைப்பு சொல்லும் பாடங்கள்
விழாவையொட்டி, கோயில் தந்திரி, கோயிலில் இருந்து ஏற்றிய தீபத்தை மேல்சாந்தியிடம் கொடுக்க அவர் கோயிலின் முன் அமைக்கப்பட்டிருந்த பண்டார அடுப்பில் தீ மூட்டினார். இதைத் தொடர்ந்து கோயில் மணி ஒலிக்கப்பட்டு, ஒலிப்பெருக்கியில் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து சுற்றுப் பகுதியில் இருந்த பெண்கள் தங்கள் பொங்கல் அடுப்பில் தீ மூட்டினர். பிற்பகலில் பொங்கல் நிவேத்யம் நடைபெறும். இதற்காக நூற்றுக்கணக்கான புரோகிதர்கள் மூலம் புனிதநீர் தெளிக்கப்படும்.
இதையும் படிக்க.. நாட்டில் மூன்று வாரங்களாக சப்தமில்லாமல் அதிகரிக்கும் கரோனா
இவ்விழாவை முன்னிட்டு திருவனந்தபுரம் நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. இவ்விழாவில் ஜாதி, மத வேறுபாடின்றி அனைத்துத் தரப்பு பெண்களும் திறந்தவெளியில் பொங்கலிட்டு ஆற்றுக்கால் பகவதி அம்மனுக்கு படைக்கும் இந்த விழா உலகப் பிரசித்தி பெற்றதாகும்.