இந்தியாவில் கடந்த மூன்று வாரங்களாக கரோனா வைரஸ் பாதிப்பு சப்தமில்லாமல் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது.
தொடர்ந்து அதிகரித்தாலும் கரோனா பாதிப்பு கடந்த வாரத்தில் 1,898 ஆகவே உள்ளது. பலி எண்ணிக்கை பெரிதாக உயரவில்லை என்பது ஆறுதல்.
முதல் வாரம் கரோனா பாதிப்பு 13 சதவிகிதமாகவும், இரண்டாவது வாரம் 39 சதவிகிதமாகவும் மூன்றாவது வாரம் 63 சதவிகிதமாகவும் உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரத்தில்தான் அதிகமான பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
இதையும் படிக்க.. சுஷ்மிதாவை தாக்கிய மாரடைப்பு சொல்லும் பாடங்கள்
அண்மை நாள்களாக நாடு முழுவரும் பல்வேறு வைரஸ் காய்ச்சல்கள் அதிகரித்து வரும் நிலையில், இதனூடே கரோனா வைரஸ் பாதிப்பும் அதிகரித்துள்ளது. கடந்த ஐந்து வாரங்களாகவே அதிகரிப்பு தொடர்ந்தாலும், கடந்த 3 வாரங்களாக அதன் விகிதம் சற்று அதிகமாக உள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நாட்டில் புதிதாக 1898 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதுவே அதற்கு முந்தைய வாரத்தில் 1,163 ஆகவும், அதற்கும் முந்தைய வாரத்தில் 839 ஆகவும் இருந்துள்ளது. இது மிகப்பெரிய தாக்கமாக பார்க்கப்படவில்லை என்றாலும், தொடர்ந்து அதிகரிக்கிறது என்பது நிச்சயம் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டிய விஷயமாகவே உள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்துக்குப் பின் தற்போதுதான் தொடர்ந்து கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் போக்கு தொடங்கியிருக்கிறது. அதற்கு முன்பும் அதிகரித்திருந்தாலும் இரண்டு வாரங்களுக்கு மேல் நீடிக்காமல் இருந்துள்ளது. கடந்த ஜனவரி 23 - 29ஆம் வாரத்தில் வெறும் 707 பேருக்குத்தான் கரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது.
கடந்த வாரத்தில் மட்டும் தென்னிந்தியா மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் அதிகப்படியான பாதிப்பு உறுதி செய்யப்பட்டுளள்து. எனவே, மக்களே கூட்டமான இடங்களுக்குச் செல்லும் போது கவனம்.. மிக கவனம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.