நாடாளுமன்றத்திற்கு ராகுல் காந்தி வருகை!
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இந்திய ஜனநாயகத்தை விமா்சித்து ராகுல் காந்தி பேசியது சர்ச்சையான நிலையில், நாடாளுமன்ற வளாகத்திற்கு அவர் வருகை தந்துள்ளார்.
தில்லி: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இந்திய ஜனநாயகத்தை விமா்சித்து ராகுல் காந்தி பேசியது சர்ச்சையான நிலையில், நாடாளுமன்ற வளாகத்திற்கு அவர் வருகை தந்துள்ளார்.
பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அண்மையில் சொற்பொழிவாற்றிய ராகுல் காந்தி, இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்குள்ளாகி இருப்பதாகவும், அவா் உள்பட பல்வேறு அரசியல் தலைவா்கள் மத்திய அரசின் கண்காணிப்பு வளையத்தில் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினாா்.
இந்திய ஜனநாயகம் குறித்தும், நாடாளுமன்றம் குறித்தும் வெளிநாட்டில் பேசியதற்காக ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஆளும் பாஜக எம்.பி.க்கள் 4-வது நாளாக நாடாளுமன்ற கூட்டத்தை இன்று முடக்கியுள்ளனர்.
இதையும் படிக்க | நான்காவது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்!
நாடாளுமன்றக் கூட்டம் மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கவுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்திற்கு ராகுல் காந்தி வருகை தந்துள்ளார்.
லண்டன் பேச்சு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இந்தியாவுக்கு எதிராக எதுவும் பேசவில்லை. என்னை அனுமதித்தால் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிப்பேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.