மஹாதேவ் சூதாட்ட செயலியை மத்திய அரசு தற்போது வரை ஏன் தடை செய்யவில்லை என பிரதமர் மோடிக்கு சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் கேள்வி எழுப்பியுள்ளார்.
மஹாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர்களிடம் இருந்து பூபேஷ் பகேல் ரூ.508 கோடி பெற்றதாக சமீபத்தில் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியிருந்தது.
அதனையடுத்து துர்க் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இந்த விவகாரத்தைக் குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, “சூதாட்ட செயலி ஊழலுக்கும் சத்தீஸ்கர் மாநில அரசுக்கும் என்ன தொடர்பு என்பதை முதல்வர் பூபேஷ் பகேல் மக்களிடம் தெரிவிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய பூபேஷ் பகேல், “சூதாட்ட செயலியை தற்போது வரை ஏன் மத்திய அரசு தடை செய்யவில்லை? அதனை தடை செய்வதற்கும், இதில் தொடர்புடையவர்களை கைது செய்வதற்குமான பொறுப்பு மத்திய அரசுக்கே உள்ளது. தற்போது வரை ஏன் இதில் தொடர்புடையவர்களை கைது செய்யவில்லை. சூதாட்ட செயலி உரிமையாளர்களுக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் பேசிய அவர், “இந்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், எனக்கு இருக்கும் செல்வாக்கைப் பார்த்து பாஜக பயந்துள்ளது. அதன் விளைவாகவே அமலாக்கத்துறையின் மூலமாக என் மீது அவதூறு பரப்புவதற்கு முயற்சித்து கொண்டிருக்கிறது” என்று கூறினார்.
90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.