மதுரா கிருஷ்ண ஜன்மபூமி நில விவகாரம் தொடர்பான வழக்கை ஜனவரி 9-ஆம் தேதி விசாரிப்பதற்கு உச்சநீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் உள்ள மதுரா கிருஷ்ண ஜன்மபூமி நிலப் பிரச்னை தொடர்பான வழக்கை 2024 ஆம் ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி விசாரிப்பதற்கு உச்சநீதிமன்றம் இன்று (நவம்.10) பட்டியலிட்டுள்ளது.
நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு இதனைப் பட்டியலிட்டது.
இந்த வழக்கு விசாரிக்கப்பட வேண்டியது என்று தோன்றுவதாகக் கூறிய நீதிமன்றம், இரு தரப்பினரையும் விரைவில் இதுகுறித்த விவரங்களைத் தாக்கல் செய்யும்படி கூறியது.
மதுராவின் கிருஷ்ணா ஜன்மபூமி நிலப் பிரச்சனை தொடர்பாக நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்குகளின் விவரங்கள் அனைத்தையும் தெரிவிக்குமாறு அலகாபாத் உயர்நீதிமன்றப் பதிவாளருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான அனைத்து மனுக்களையும் மதுரா மாவட்ட நீதிமன்றத்திலிருந்து தனது விசாரணையின் கீழ்கொண்டு வந்து அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஷாஹி மஸ்ஜித் இத்கா மேலாண்மை அறக்கட்டளை குழு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
மே 26 அன்று அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, மதுராவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த கிருஷ்ண ஜன்ம பூமி நில விவகார வழக்குகள் அனைத்தும் அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன.
லக்னோவைச் சேர்ந்த ரஞ்சனா அக்னிஹோத்ரி என்பவர், கிருஷ்ண ஜன்மபூமிக்கு சொந்தமான 13.37 ஏக்கர் நிலத்தின் உரிமை தொடர்பாக வழக்கு தொடர்ந்தார். கிருஷ்ண ஜன்மபூமியில் 1669-70 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டுள்ள ஷாஹி இத்கா மசூதியை அகற்றுமாறு அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.