ஹைதராபாத்: தெலங்கானாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆட்டோவில் பயணித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவடையவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் தெலங்கானாவுக்கு படையெடுத்துள்ளனர்.
காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் இணைந்து இன்று பொதுக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
இதற்கு முன்னதாக, ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் உணவு விநியோகிக்கும் தொழிலாளர்களுடன் அவர்கள் சந்திக்கும் அன்றாட பிரச்னைகள் குறித்து ராகுல் காந்தி உரையாடினார்.
இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஆட்டோ பயணித்தபடி ஊர்வலமாக வந்து மக்களிடம் வாக்கு சேகரித்தனர்.
சமீபகாலமாக விவசாயிகள், கூலித் தொழிலாளிகள், லாரி ஓட்டுநர்கள் எனப் பல்வேறு தரப்புனரை நேரில் சந்தித்து ராகுல் காந்தி உரையாடி வருவது குறிப்பிடத்தக்கது.