புவனேஷ்வர்: ம்ருத்துவம் மற்றும் பொறியியல் சார்ந்த படிப்புகளில் சேர மத்திய அரசின் தேர்வு முகமை நடத்தும் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளுக்கான இலவச பயிற்சியை ஒடிசா அரசு, அம்மாநில அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இறுதி வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அளிக்கவுள்ளது.
ஒடிசா உயர் கல்வித் துறை இயக்குனர் ஆர் ரகுராம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்களுக்கு அவர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் துணை பயிற்சியாக ஆன்லைன் வழியில் வகுப்புகள் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சிகள் ஆன்லைன் முறையில் நடத்தப்பட உள்ளதால், அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் கல்வி அறைகளுக்கான ஏற்பாடுகளை உறுதி செய்யுமாறும் அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பஞ்சாப், ஹரியாணாவில் கனமழை எச்சரிக்கை!
அதிக தொகை கட்டணமாகச் செலுத்த வேண்டியிருக்கும் தனியார் பயிற்சி வகுப்புகளுக்கு மாற்றாக அரசே, தேவைப்படும் மாணவர்களுக்கு இந்தப் பயிற்சியை வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.